Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தர்மபுரி: தர்மபுரி அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் முன்னாள் சென்ற சரக்கு வாகனத்தின் மீது மோதியத்துடன் சாலை தடுப்பைத் தாண்டி ஓடி எதிர் திசையில் வந்த ஆம்னி பேருந்தின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பெண் உட்பட இருவர் பலியானார்கள். மேலும் 11 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு அரிசி லோடு ஏற்றிய சரக்கு வாகனம் இன்று காலை தோப்பூர் கணவாயில் சென்று கொண்டிருந்தது. தாழ்வான சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற மற்றொரு சரக்கு வாகனத்தின் மீது மோதியத்துடன் செண்டர் மீடியனை தாண்டி பக்கத்து சாலைக்குள் புகுந்தது.
அப்போது எதிரே கேரளாவிலிருந்து பெங்களூர் நோக்கி வந்துக் கொண்டிருந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் சரக்கு வாகனம் தாறுமாறாக வருவதை பார்த்து இடது புறமாக ஒதுங்கியதால் நேருக்கு நேராக மோதாமல் பக்கவாட்டில் மோதி கவிழ்ந்துள்ளது. இதில் சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் ரமேஷ் சம்பவ இடத்திலே பலியானார். ஆம்னி பேருந்தில் பயணித்த கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணம் செய்து காயமடைந்த 11 பயணிகளை போலீசார் மீட்டு தர்மபுரி மற்றும் சேலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தால் தோப்பூர் கணவாய் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.