Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சட்டக்கல்லூரிக்கு முன்னாள் அமைச்சர் கக்கன் பெயரை சூட்டவேண்டும் - ஐகோர்ட்டு

ஆகஸ்டு 01, 2019 02:27

சென்னை: சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் செயல்பட்டு வந்த டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி 2 ஆக பிரிக்கப்பட்டு காஞ்சீபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்திற்கும், திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப் பெரும்புதூருக்கும் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

புதுப்பாக்கத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்பும், பட்டரைப் பெரும்புதூரில் 3 ஆண்டு சட்டப்படிப்பும் நடத்தப்பட்டு வருகிறது. சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதை எதிர்த்து சட்டக்கல்லூரி மாணவர்கள் முன்பு தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக சட்டக்கல்வி இயக்குனர் என்.எஸ்.சந்தோஷ்குமார் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறி இருந்ததாவது:-

ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் 186 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 96 பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டது. எஞ்சிய பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அதேபோல கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதுப்பாக்கம் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதியில் தமிழ் நாளிதழ்களுடன், ஆங்கில நாளிதழ்களும், தொலைக்காட்சி வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

அரசு சட்டக்கல்லூரி மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறனை வளர்க்க சட்டக்கல்வி இயக்ககம் பிரிட்டிஷ் கவுன்சிலுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அரசின் ஒப்புதலுடன் இந்த ஆங்கில பயிற்சி வகுப்பு விரைவில் அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் ஆரம்பிக்கப்படும். அதுபோல பட்டரைப் பெரும்புதூர் மற்றும் புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரிகளில் தடையற்ற செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவை கிடைக்க பி.எஸ்.என்.எல். சார்பில் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதிகள், “காஞ்சீபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப் பெரும்புதூர் ஆகிய இடங்களில் செயல்படும் அரசு சட்டக் கல்லூரிகள் ஒரே பெயரில் செயல்படுவதால் மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் குழப்பம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே ஒரு கல்லூரிக்கு டாக்டர் அம்பேத்கர் பெயரையும், மற்றொரு கல்லூரிக்கு தமிழக முன்னாள் அமைச்சர் கக்கன் பெயரையும் வைக்க அரசு பரிசீலிக்க வேண்டும். அல்லது தமிழக அரசே இதுகுறித்து முடிவு செய்யலாம் என்று கருத்து தெரிவித்தனர்.

மேலும் காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் மாணவர்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள போலீஸ் ‘பூத்’களில் போதிய எண்ணிக்கையில் போலீசார் பணி அமர்த்தப்பட வேண்டும். பின்னர் விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தனர். 

தலைப்புச்செய்திகள்