Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்கம் விலை பவுனுக்கு ரூ.27 ஆயிரத்தை தாண்டியது

ஆகஸ்டு 03, 2019 05:50

சென்னை: சர்வதேச அளவில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், சென்னையில் தங்கம் விலை புதிய உயர்வைத்  தொட்டது. 22 கேரட் கொண்ட தங்கம் ஒரு பவுன் ரூ.27,064-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் கடந்த சில மாதங்களாக ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது.

சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ.27,064-க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3,383-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3,310-க்கு விற்கப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியதாவது:

அமெரிக்காவில் பொருளாதாரத்தில் மாற்றம், வைப்புத்  தொகை மீதான வட்டி குறைவு, சீனப் பொருட்களுக்கு அமெரிக்காவில் 10 சதவீதம் வரி விதிப்பு போன்ற காரணங்களாக சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.

இந்தியாவிலும் இறக்குமதி உயர்த்தப்பட்டுள்ளதால், தங்கம் விலை இதுவரையில் இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது’’ என்றார்.

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால்,  நகை வாங்குவதில் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். தவிர்க்க முடியாத விஷேங்களுக்கு மட்டுமே நகை வாங்கிச்  செல்கின்றனர். இதனால், தமிழகத்தில் பெரும்பாலான நகைக்  கடைகளில் கூட்டம் குறைவாக இருந்தது. 

குறிப்பாக, சென்னையில் இருக்கும் பிரபல நகைக்  கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் குறைந்து சுமார் 20 சதவீதம் வரையில் விற்பனை குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்