Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
வேலூர்: வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலுக்கான இறுதிகட்ட பரப்புரை தீவிரமாக நடந்துவரும் நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக-வில் இருந்து எந்த தலைவர்களும் பரப்புரையில் ஈடுபடாதது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பரப்புரை மேற்கொண்டிருக்கும் நிலையில், கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் பாஜக சார்பில் தலைவர்கள் யாரும் இதுவரை பரப்புரை மேற்கொள்ளவில்லை.அதிமுக நடத்தும் பிரச்சாரக் கூட்டங்களில் கூட பெயர் அளவில் ஒரு சில மேடைகளில் பாஜக நிர்வாகிகளை மட்டுமே காணமுடிகிறது
வேலூர் தொகுதியை பொருத்தவரை ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக சிறுபான்மை மக்கள் வசிக்கும் நிலையில், பாஜக-வினர் இந்த பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டால் அது அதிமுகவின் வெற்றிக்கு எதிர்வினையாகிவிடும் என அதிமுக தலைமை கருதுவதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுக திட்டமிட்டே பாஜகவை புறக்கணிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டை அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.