Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சேலம்: சேலத்தில் ஹெல்மெட் அணியாமலும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகவும் 1400 பேர் மீது 2 மணி நேரத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.சேலம் மாநகரில், ஹெல்மெட் அணியாமல் செல்வோர், குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது, அதிரடி நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று மாலை 5 மணியில் இருந்து 7 மணி வரை போக்குவரத்து போலீசார் மற்றும் அந்தந்த போலீஸ் ஸ்டேசனிலும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.
மாநகர் முழுவதும் போலீசார், அதிரடி சோதனை நடத்தினர். 2 மணி நேர சோதனையில் 1392 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 965 வழக்குகள் ஹெல்மெட் அணியாமல் சென்றதாகும். குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 48 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘டூவீலரில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும். இதன் மூலம் விபத்தில் சிக்கினால் கூட உயிர் பிழைத்து கொள்ளலாம். இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும்,’ என்றார்.