![](admin/uploads/.6097c2cbf0d9f8.25586821.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள நெய்க்காரன்பட்டியில் நேற்று காலை ரெயில் தண்டவாளத்தில் 2 பெண்கள் பிணமாக கிடந்தனர்.அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து, அங்கு விரைந்த சேலம் ரெயில்வே போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர்கள் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பரளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒத்தையூரை சேர்ந்த கூலித்தொழிலாளி கண்ணையனின் மனைவி மற்றும் மகள் என்று தெரிய வந்தது. நேற்று முன்தினம் ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு கண்ணையன், தனது மனைவி கண்ணகி மற்றும் மகள் அகல்யா ஆகியோருடன் சென்றுள்ளார். அங்கு தாய், மகள் 2 பேரும் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஒருவர் நீங்கள் 2 பேர் மட்டும் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறீர்கள், கண்ணையனுக்கு ஏன் வாங்கி கொடுக்கவில்லையா? என்று கேட்டுள்ளார்.
அதற்கு கண்ணகி, குடிகாரனுக்கு எதற்கு வாங்கி கொடுக்க வேண்டும் என்று அந்த நபரிடம் கூறியதாக தெரிகிறது. அதன்பின்னர் கண்ணையன், தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ஐஸ்கிரீம் சாப்பிட்டது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கண்ணகி தனது மகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்று ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து தாயும், மகளும் படுத்து கொண்டதும், அந்த வழியாக வந்த ரெயில் அவர்கள் மீது ஏறியதில் 2 பேரும் இறந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிகிறது. ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து தாய்-மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.