Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
விழுப்புரம்: திருக்கோவிலூர் தாலுகாவில் இலவச வேட்டி, சேலை வழங்கியதில் பல லட்சம் முறைகேடு செய்த கண்டாச்சிபுரம் தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பல கிராமங்களில் வேட்டி, சேலைகள் முழுமையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக திருக்கோவிலூர் தாலுகாவில் 80 சதவீதம் பேருக்கு இந்த வேட்டி, சேலைவகள் வழங்கப்படவில்லை என்று புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்த ஆட்சியர் சுப்ரமணியன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடந்த பொங்கல் பண்டிகையின் போது திருக்கோவிலூர் தாசில்தாராக இருந்த சீனுவாசன் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கவில்லை என்பது உறுதியானது. இதனை கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் உடந்தையுடன் அவர்களுக்கே விற்பனை செய்து பல லட்சும் முறைகேடு செய்ததாகவும் கூறப்படுகிறது. கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் இதனை அடுத்த ஆண்டு புதிதாக விநியோகம் செய்வதற்காக பணத்தை பெற்று கொண்டுள்ளதாகவும் தெரியவந்தது.
இது தொடர்பான விசாரணை அறிக்கையை திருக்கோவிலூர் துணை ஆட்சியர், மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பித்தார். இதை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட சீனுவாசனை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் சுப்ரமணியன் நேற்று உத்தரவிட்டார். சீனுவாசன் தற்போது கண்டாச்சிபுரம் தாசில்தாரராக இருந்தது குறிப்பிடத்தக்கது.