Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ1-க்கு புரோட்டா, ரூ10-க்கு பிரியாணி: தேனியில் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே ஹோட்டல் சூறை

ஆகஸ்டு 06, 2019 06:52

தேனி: தேனியில் புதிதாக திறக்கப்பட்ட ஹோட்டல் ஒன்று ரூ 1-க்கு புரோட்டா, ரூ 10-க்கு பிரியாணி விற்பனை செய்யப்படுவதாக அறிவித்த நிலையில், சீக்கிரமே உணவு தீர்ந்துவிட்டதால் வரிசையில் நின்றவர்கள் ஹோட்டலை சூறையாடினர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நேற்று முன்தினம் புதிதாக திறக்கப்பட்ட தனியார் உணவகத்தில் புரோட்டா முதல் பிரியாணி வரை அனைத்துப் பொருட்களுக்கும் அதிரடி விலை குறைப்பை அறிவித்தனர்.

அதன்படி, ரூ.10 விலையுள்ள ஒரு புரோட்டா ரூ.1-க்கும், ரூ.100 விலையுள்ள பிரியாணி ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அங்கு பொதுமக்கள் குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் மற்றும் முதியவர்கள் என ஏராளமானோர் வரிசையில் குவிந்தனர். அருகில் உள்ள ஊர்களிலிருந்தும் மக்கள் குவிய தொடங்கினர்.

இதையடுத்து காவல்துறையினர் அங்கு வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். நேரமாக நேரமாக கூட்டம் கூடிக்கொண்டே போனது அதற்கேற்ப பிரியாணியும் புரோட்டாவும் தயாராகிக்கொண்டிருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் ஹோட்டல் ஊழியர்கள் சோர்ந்து போயினர். இதனால், உணவு தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. கூட்டமும் கூடிக்கொண்டே இருந்ததால், ஹோட்டல் உரிமையாளர் காத்திருந்தவர்களிடம், சலுகை விலை ஆஃபர் முடிந்து விட்டதாகவும், நாளை முதல் வழக்கமான விலையில் உணவு விற்கப்படும் என்றும் கூறினார்.

இதனால், கால்கடுக்க காத்திருந்தவர்கள் கடுப்பாகி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் காத்திருக்கிறோம்; இப்போது வந்து பிரியாணி இல்லை என்று கூறினால் எப்படி என்று சண்டையிட்டனர். ஒரு சிலர் ஹோட்டல் உள்ளே சென்று சேர்களை உடைத்தனர். பாத்திரங்களையும் தட்டிவிட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பிரச்னையால் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே ஹோட்டல் சீக்கிரம் மூடப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்