Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

8 வழிச்சாலை திட்டம்: சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஆகஸ்டு 07, 2019 01:58

டெல்லி: 8 வழிச்சாலை திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின், 'பாரத்மாலா' திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது. 

இதன்படி, வனப்பகுதியில் மட்டும் 120 ஹெக்டோ் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும், அந்த நிலங்களில் உள்ள 10 ஆயிரம் பாசன கிணறுகள், 100 குளங்கள், பல லட்ச மரங்கள் அழிக்கப்படும் என்றும், அதுவும் 1.20 லட்சம் மரங்கள் வெட்டப்பட உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த திட்டத்தால், சேர்வராயன், கல்வராயன் உள்பட 8 மலைகள் உடைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து, சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக அன்புமணி உள்ளிட்ட சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு, 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இந்த நிலையில் 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பாஜக, விரைவில் 8 வழிச்சாலை செயல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நிலத்தை அளிக்கும் பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்குமாறு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளித்தது. இதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. அத்துடன் 8 வழிச்சாலை வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் 22ம் தேதி முதல் தொடங்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்