Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீலகிரி மாவட்டத்தில் மழைக்கு 5 பேர் பலி, பொள்ளாச்சியில் 2 வயது குழந்தையை வெள்ளம் அடித்து சென்றது

ஆகஸ்டு 10, 2019 10:06

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. அங்குள்ள ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா, அவலாஞ்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று 7-வது நாளாக மழை கொட்டியது. இதன் காரணமாக அங்குள்ள ஓடைகள், நீர்வீழ்ச்சிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஊட்டி அருகே உள்ள குருத்துக்குளி கிராமத்தை சேர்ந்த விமலா (வயது 45), சுசிலா (50) ஆகியோர் நஞ்சநாடு அரசு தோட்டக்கலை பண்ணையில் பணியாளர்களாக வேலை செய்து வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் மாலையில் வேலைக்கு சென்றுவிட்டு தங்கள் வீட்டிற்கு நடந்து சென்றனர்.

பலத்த மழை காரணமாக உப்புட்டி கால்வாயில் தண்ணீர் அதிகமாக சென்றது. அப்போது அந்த கால்வாயை கடக்க முயன்றபோது இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். பின்னர் நேற்று காலை உப்புட்டி கால்வாய் ஓரத்தில் கிடந்த அவர்களின் உடல்களை போலீசார் மீட்டனர்.

ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அனுமாபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீடு இடிந்து விழுந்தது. இதில், அவரது மனைவி அமுதா (35), மகள் பாவனா (9) ஆகியோர் உயிரிழந்தனர். அவரது மகன் லோகேஷ்வரன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மஞ்சூர் அருகே காட்டுக்குப்பை பகுதியில் மின் உற்பத்தி நிலைய கட்டுமான பணி நடைபெற்ற இடத்தில் திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது. இதில் மண்ணுக்குள் புதைந்து கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த சஞ்சு (30) என்பவர் பரிதாபமாக இறந்தார்.

பல்வேறு இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. எல்லமலை பகுதியை சேர்ந்த ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவரை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தை போல் கோவை மாவட்டத்திலும் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இங்குள்ள வால்பாறை பகுதியில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள அனைத்து ஓடைகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி அருகே சர்க்கார்பதி வனப்பகுதியில் நாகூர்ஊத்து என்ற இடத்தில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் இருந்த 22 குடிசை வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

வெள்ளம் அதிகமாக பெருக்கெடுத்து ஓடியதால் 2 வயது குழந்தை சுந்தரி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. அந்த குழந்தையின் நிலை என்ன என்பது தெரியவில்லை. வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்கள் அங்குள்ள மின்வாரிய குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள வேவர்லி எஸ்டேட் பிரிவு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையிலும் கனமழை கொட்டியதால் நொய்யல் ஆற்றில் 5-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பேரூரில் இருந்து வேடப்பட்டி செல்லும் வழியில் ஆற்றை ஒட்டி ஆத்துமேடு என்ற பகுதி உள்ளது. இங்கு ஏராளமான வீடுகள் உள்ளன. அங்கு ஆற்று நீர் உள்ளே புகுந்ததால் 55 பேர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.

கோவை தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரில் சிக்கிய 55 பேரையும் கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தலைப்புச்செய்திகள்