Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னையில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு மற்றும் தொலைதொடர்பு இயந்திரங்கள் முழுமையாக பழுதானதால் பயணிகளுக்கு டிக்கெட் வினியோகம் செய்ய முடியாமல் சிரமம் ஏற்பட்டது.
சென்னையில் உள்ள 32 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் உள்ள டிக்கெட் வினியோகம் செய்யும் இயந்திரங்கள் மற்றும் தொலைதொடர்பு சேவை இயந்திரங்கள் அனைத்தும் இன்று காலை திடீரென பழுதானது.
இயந்திரங்களில் உள்ள நேரம் மற்றும் நாள், ஆண்டு ஆகியவை 2000 ஆண்டுக்கு சென்றது. இதனால், பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்க முடியவில்லை. கோளாறு காரணமாக இன்று காலை 6 மணி முதல் பயணிகளுக்கு பேப்பர் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பயணிகளுக்கு வழக்கமாக பயணச்சீட்டு உபயோகிப்பதால் கிடைக்கும் சலுகைகள் இன்று கிடைக்கவில்லை. மேலும், டோக்கன் விநியோகமும் செய்ய முடியாததால், பயணிகள் அனைவருக்கும் டிக்கெட் கொடுத்து பரிசோதனை செய்து அனுப்ப இயலாமல் ஊழியர்களும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால், கோளாறு சரியாகும் வரை இலவசப்பயணம் என்று அறிவிக்கப்பட்டது.
தற்காலிக ஒப்பந்த பணியாளர்களை வைத்து தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தக் கோளாறு ஏற்பட்டு உள்ளது. முறையான பயிற்சியற்ற ஒப்பந்த ஊழியர்கள் பராமரிப்பு பணியினை சரிவர மேற்கொள்ளாததால் இது போன்ற புதுவிதமான பிரச்சினைகள் வருவதாக மெட்ரோ அதிகாரிகளே குற்றம் சாட்டியுள்ளனர்.