Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சை அருகே வீடு புகுந்து 3 பெண்களிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு

ஆகஸ்டு 20, 2019 03:34

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்செனம்பூண்டி கிராமம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது49). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜோதிலட்சுமி(45), தனது தாய் பிரேமாவதி (68), மகள் பூங்குழலி(23) ஆகியோருடன் திருச்செனம்பூண்டியில் வசித்து வருகிறார்.

நேற்று அதிகாலை ஜோதிலட்சுமி, பிரேமாவதி, பூங்குழலி ஆகிய 3 பேரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த 2 மர்ம நபர்கள், 3 பேரின் கழுத்தில் கிடந்த 10 பவுன் சங்கிலிகளை பறித்தனர்.

இதனால் 3 பேரும் ‘திருடன் திருடன்’ என கூச்சல் போட்டனர். ஆனால் ஆட்கள் வருவதற்குள் மர்ம நபர்கள் 10 பவுன் சங்கிலிகளுடன் வீட்டின் பின்புற கதவை திறந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மர்ம நபர்கள் பறித்து சென்ற தங்க சங்கிலிகளின் மதிப்பு ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் இருக்கும் என தெரிகிறது.

இதுகுறித்து தோகூர் போலீஸ் நிலையத்தில் ஜோதிலட்சுமி புகார் கொடுத்தார்.

அதன்பேரில் தோகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து பெண்களிடம் சங்கிலிகளை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
 

தலைப்புச்செய்திகள்