Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மேட்டூர்: மேட்டூருக்கு நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 116.25 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து இதே அளவு தண்ணீர் அணைக்கு வந்தால் இன்னும் 6 நாளில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 120 அடியை உச்சபட்ச நீர்தேக்கும் அளவாக மேட்டூர் அணை கொண்டது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை தணிந்தது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப் படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. உபரிநீர் குறைக்கப்பட்டதால் ஒகேனக் கல்லில் நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி, விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 4 மணிக்கு 30 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 27 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து சரிந்துள்ளது. அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் 13வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது. இதேபோல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் படிப்படியாக சரிந்து வருகிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதமும், கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 114.85 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 116.25 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 86.95 டிஎம்சியாக உள்ளது. கர்நாடகத்தில் மழை குறைந்துள்ள காரணத்தால் நீர்வரத்து சரிந்துள்ளது. தொடர்ந்து இதே அளவு தண்ணீர் வந்தால் அணை இன்னும் 5 அல்லது 6 நாளில் நிரம்பும்.