Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கடலூர்: சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகர் கலுங்குமேடு பகுதியைச் சேர்ந்த கோழி பாண்டியன் என்ற பிரபல ரவுடி மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று இரவு மணிகண்டன் என்பவருடன், அண்ணாமலை நகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள ஓட்டலில் கோழி பாண்டியன் உணவருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று, திடீரென அவர் மீது சிறிய நாட்டு ரக வெடிகுண்டை வீசியது. இதில் ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது உள்ளே புகுந்த அந்த கும்பல், அவரை சரமாரியாக வெட்டியது. இதில் நிகழ்விடத்திலேயே கோழி பாண்டியன் உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் வந்த போலீசார், தடயங்களை சேகரித்தனர். அப்போது வெடிக்காத நிலையில் நாட்டு வெடிகுண்டு ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பின்னர் விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார், கடலூர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபிநவ் ஆகியோர் அப்பகுதியை ஆய்வு செய்தனர்.
இந்த படுகொலையில் தொடர்புடைய கும்பலை பிடிப்பதற்கு 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.