Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் பறிமுதல்

ஆகஸ்டு 21, 2019 03:25

நாகை: நாகை அருகே கோயிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட மூன்று ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர், ஒருவரை கைது செய்தனர்.

நாகை மாவட்டம் கோடியக்கரை கோடி முத்துமாரியம்மன் கோவிலில் இருந்த முருகன், வள்ளி, தெய்வானை, மாரியம்மன் ஆகிய நான்கு ஐம்பொன்  சிலைகள் கடந்த வாரம் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில்  திருக்குவளை அருகே உள்ள ராமன்கோட்டகம் என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ஐம்பொன்சிலைகளை பதுக்கி வைத்து இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் அந்த வீட்டில் சோதனை செய்த போது மூன்று ஐம்பொன் சிலைகளை சாக்கு மூட்டையில் கட்டி வைத்திருந்தது தெரிய வந்தது. 

அந்த சிலைகளைக் கைப்பற்றிய போலீசார், இதுதொடர்பாக  வேதாரண்யம் மறைஞாயநல்லூரைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை வெளிநாட்டிற்குக் கடத்தத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

மேலும் ஒரு ஐம்பொன் சிலை எங்கே என்பது குறித்தும், இந்தக் கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றியும் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

தலைப்புச்செய்திகள்