Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டீ கடையில் தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய முதல்வர்

ஆகஸ்டு 22, 2019 08:35

மேற்கு வங்காளம்: மேற்கு வங்காளமுதல் மந்திரி மம்தா பானர்ஜி கிழக்கு மிட்னாபூர் பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களிடம் உரையாடினார்.  அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து கொண்டார்.

இதன்பின்பு, ஒடிசா எல்லையை ஒட்டி அமைந்த தத்தபூர் பகுதிக்கு சென்ற அவர், அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகளும், பெண்களுக்கு சேலைகளும் வழங்கினார்.  முன்னதாக மக்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, குடிசையில் வாழ்ந்த மூதாட்டி உள்ளிட்ட பலரது வாழ்வு குறித்தும் கேட்டறிந்தார்.  அந்த பகுதியில் இருந்த மக்களுடன் அவர் செல்போனில் படம் எடுத்தும் மகிழ்ந்தார்.

இதன்பின் அவருக்கு தேநீர் அருந்த வேண்டும் என தோன்றியது.  இதனால் அவர் தேநீர் கடை ஒன்றுக்கு சென்றார்.

அவருடன் கட்சி தலைவர்கள் சுப்ரதா முகர்ஜி, போக்குவரத்து மந்திரி சுபந்து அதிகாரி மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் சென்றனர்.  அங்கு கடைக்காரரிடம் அனுமதி பெற்று கொண்டு அவரே தேநீர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.  பின்னர் அதனை அங்கிருந்த மக்களுக்கு அவரே தன் கைப்பட வழங்கினார்.

தேர்தல் திட்ட நிபுணர் பிரசாந்த் கிஷோர் அறிவுரையின்படியே, தேநீர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது, மக்களுடன் மக்களாக இணைந்து இருப்பது, அவர்களின் குறைகளை கேட்பது, நகர மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பொது மக்களின் வீடுகளுக்கு செல்வது ஆகியவற்றை மம்தா மேற்கொள்கிறார். இந்த வீடியோக்கள் மற்றும் படங்கள் சமூக வலைதளங்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் ஐபேக் நிறுவனத்தின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் உள்ளார். 2014-ம் ஆண்டில், நரேந்திர மோடி பிரதமராவதற்கு, ஐபேக் நிறுவனம் பின்னணியில் இருந்து செயல்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் மாத முதல் வார தொடக்கத்தில் பிரசாந்த் கிஷோரை, மம்தா சந்தித்து பேசினார்.  இதன்பின்பு மேற்கு வங்காள தேர்தல் பணிக்கு அவரை அமர்த்தினார்.


 

தலைப்புச்செய்திகள்