Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பெங்களூரு : கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆட்சியில் இருந்த போதும், அவரின் ஆட்சி கவிழ்ந்த பிறகும் காங் - மஜத கூட்டணிக்குள் இந்த சலசலப்பு, இப்போது வெளிப்படையான மோதலாக வெடித்துள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்., உடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தது மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி. முதல்வராக குமாரசாமி பதவியேற்ற பிறகு, முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவி கேட்டும், அமைச்சர் பதவி கேட்டும் காங்., போர்க்கொடி தொடுத்தது. நாளடைவில் இது முற்றியதால் காங்., கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. ஆட்சியை இழந்து, பா.ஜ.,வின் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்ற பிறகும் காங் - மஜத கூட்டணியின் மோதல் ஓயவில்லை.
இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்., தலைவருமான சித்தராமைய்யா, நானும் தேவகவுடாவும் பல தொகுதிகளில் பிரசாரம் செய்தோம். ஆனால் லோக்சபா தேர்தலில் அவரும், அவரது பேரனும் தோற்றதற்கு நான் தான் காரணம் என குற்றம்சாட்டுகிறார். அப்படியானால் எங்களின் வேட்பாளர்கள் ஏன் தோற்றனர் என சொல்லட்டும்? இதற்கு பின்னால் என்ன காரணம் உள்ளது? எங்களுக்கு எதிராக ஓட்டளித்தவர்கள் மீது அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா?
தேவகவுடா, வேறு யாரையும் வளர விட மாட்டார். அவரது சொந்த ஜாதியை சேர்ந்தவர்கள் கூட வளர கூடாது என நினைப்பவர் அவர். எனக்கு அனைத்து ஜாதிகளிலும், அனைத்து கட்சிகளிலும் நண்பர்கள் உள்ளனர். இவ்வாறு சித்தராமைய்யா தெரிவித்துள்ளது, கூட்டணிக்குள் இதுநாள் வரை இருந்து வந்த புகைச்சல், தற்போது பற்றி எரியத் துவங்கியதை அம்பலப்படுத்தி உள்ளது.