![](admin/uploads/.606e9cceaae5e4.65109233.gif)
Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாகை: நாகை மாவட்டம் சீர்காழியில் 50க்கும் மேற்பட்ட இரட்டைக் குழந்தைகள் பயின்று வரும் தனியார் பள்ளி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
சீர்காழி விவேகானந்தா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு எல்.கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரை 50க்கும் மேற்பட்ட இரட்டை குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
ஒரு வீட்டில் ஒரு ஜோடி இரட்டைக் குழந்தைகளை அடையாளம் கண்டு சமாளிப்பதே கடினம் என்னும் நிலையில், 50க்கும் மேற்பட்ட இரட்டைக் குழந்தைகளை வைத்துக்கொண்டு பள்ளி ஆசிரியர்கள் தடுமாறும் சுவாரசியத்தை பார்க்க முடிகிறது.
இரட்டைக் குழந்தைகள் அனைவருமே ஒரே வகுப்பில் ஒரே பிரிவில் பக்கத்து பக்கத்து இருக்கையில் அமரவைக்கப்படுவதால் நாள்தோறும் அங்கு கலாட்டாக்கள் அரங்கேறும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
பெரும்பாலான இந்த இரட்டையர்களின் குணாதிசயங்கள், கல்வி கற்கும் திறன் உள்ளிட்டவை ஒரே மாதிரியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இப்பள்ளியில் படிக்கும் இரட்டையர்களான பீரியங்கா - பிரித்தியங்கா ஜோடி, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தலா 373 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
இப்பள்ளியில் படிக்கும் ஒட்டுமொத்த இரட்டைக் குழந்தைகளையும் ஒருசேர பார்க்கும்போது பிரமிப்பும் அவர்களின் நடவடிக்கைகள் சுவாரசியத்தையும் ஏற்படுத்துகிறது என்பதை மறுப்பதற்கில்லை.