![](admin/uploads/.5ea02bd00965c9.31749128.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
டெல்லி: பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடலுக்கு, அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இதனையடுத்து அவரது உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு ஜெட்லி உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மாநில தலைவர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், அருண் ஜெட்லி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஜெட்லியின் உடலுக்கு, அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்திலிருந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து இறுதி சடங்குக்காக நிகாபோத் காட் பகுதிக்கு அருண் ஜெட்லி உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. மதியம் 2 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.