Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேதாரண்யத்தில் புதிய அம்பேத்கார் சிலையை அமைத்தது அரசு

ஆகஸ்டு 26, 2019 03:58

நாகை:  நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ராஜாளிக்காட்டில் இருந்து ஜீப்பில் ஒருவர் நேற்று மாலை வேதாரண்யத்துக்கு வந்தார். வேதாரண்யம் போலீஸ் நிலையம் எதிரே வந்தபோது ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது24) என்பவர் மீது ஜீப் மோதியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து காரணமாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. போலீஸ் நிலையம் எதிரே நின்று கொண்டிருந்த அந்த ஜீப்புக்கு திடீரென தீ வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்து, வன்முறையாக வெடித்தது.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையையும் உடைத்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையம் மீதும் போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டன. வன்முறையின்போது வீசப்பட்ட ஏராளமான கற்கள், வாகனத்தின் நொறுங்கிய கண்ணாடிகள் சிதறிக் கிடந்ததால் வேதாரண்யம் போலீஸ் நிலையம் அமைந்துள்ள பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.

காவல் நிலையத்தில் 3 காவலர்கள் மட்டுமே இருந்ததால் அவர்களால் தாக்குதலை தடுக்க முடியவில்லை.  இந்த சம்பவத்தால், வேதாரண்யத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலை நிறுவப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே அரசு சார்பில் புதிய சிலை வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

தலைப்புச்செய்திகள்