Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் திடீர் மாயம்

செப்டம்பர் 02, 2019 11:19

வேலூர்: வாணியம்பாடி அருகே உள்ள பெரிய வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி சுமதி. தம்பதியின் மகள் ஐஸ்வர்யா (வயது20). இவருடைய தாய்மாமன் விநாயகம் (28) குடியாத்தம் அனங்காநல்லூரில் வசித்து வருகிறார். இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர்.

திருமணத்திற்கு நாள் குறித்து உறவினர்கள் நண்பர்கள் உட்பட அனைவருக்கும் பத்திரிக்கை கொடுத்தனர். குடியாத்தம் அடுத்த காமாட்சி அம்மன்பேட்டையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று காலை திருமணம் நடைபெறுவதாக  இருந்தது. அதன் அருகே உள்ள மண்டபத்தில் நேற்றிரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மணப்பெண் ஐஸ்வர்யா மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார். மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்புக்கு பின்னர் வரவேற்பு நடந்தது.

இன்று காலையில் கோவிலுக்கு செல்வதற்காக மணமக்கள் குடும்பத்தினர் உறவினர்கள் தயாராகி கொண்டிருந்தனர். மணப்பெண் ஐஸ்வர்யாவுக்கு உறவினர்கள் நலங்கு வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. திருமணத்திற்காக கோவிலுக்கு செல்லும் முன்பு புடவை மாற்றி வருவதாக ஐஸ்வர்யா சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள் அவர் சென்ற அறையில்  பார்த்தபோது அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இந்த தகவல் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் மத்தியில் வேகமாக பரவியது. பல இடங்களில் தேடியும் மணப் பெண்ணை காணவில்லை. இதனால் தாலி கட்டும் நேரத்தில் திருமணம் நின்றது. ஐஸ்வர்யாவின் பெற்றோர் இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மணப்பெண்ணை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

தலைப்புச்செய்திகள்