Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியா முழுவதும் ஒரே ரேசன் கார்டு

செப்டம்பர் 03, 2019 07:24

புதுடெல்லி: மத்திய அரசு சில முக்கிய திட்டங்கள், சேவைகளை நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான திட்டமாக மாற்றி வருகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் “ஒரே ரேசன் கார்டு” அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் இது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது “ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு” திட்டம்அமல் படுத்தப்பட்டால் எத்தகைய இடையூறுகள் ஏற்படும்? அந்த இடையூறுகளை எப்படி தவிர்க்கலாம்? என்று விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் “ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு” திட்டம் பற்றி விவாதிக்க இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி விஞ்ஞான் பவனில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மத்திய உணவு மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தலைமை தாங்கினார். 

இக்கூட்டத்தில் மாநில நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் உணவு, பொது வினியோகத்துறை அதிகாரிகளுடன் மத்திய அரசு அதிகாரிகள் “ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டம் பற்றி விவாதித்தனர். அதன்பின்னர் இந்த திட்டத்தை எதிர்காலத்தில் எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் அனைத்து மாநிலங்களும் விரைவில் இணைய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு நுகர்வோர் துறை செயலாளர், பொது வினியோகத் திட்ட செயலாளர் பேசுகிறார்கள். ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை இந்தியா முழுவதும் அடுத்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்து நடைமுறை படுத்த வேண்டும் என்று அவர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். இதையடுத்து மாநில உணவுத்துறை அமைச்சர்கள் தங்கள் மாநில பிரச்சினைகள் பற்றி விளக்கம் அளிக்க உள்ளனர். 

தமிழ்நாட்டின் நிலைப்பாடு குறித்து உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் எடுத்துரைக்கிறார். தமிழக கூட்டுறவு, உணவுத்துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியாவும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு திட்டம் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று பல்வேறு தரப்பு நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் அரிசி வினியோகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் ஒரே விதமான கார்டு கொண்டு வந்தால் அது தமிழகத்தின் உணவுத்துறை திட்டங்களை முழுமையாக சிதைத்து விடக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான உணவுப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டால், அது தமிழ் நாட்டு மக்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு காரணம், தமிழ்நாட்டு மக்களில் அனைத்துத் தரப்பினரும் ஏதாவது ஒரு பொருளை ரேசன் கடைகளில் இருந்து பெறுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

ஏழை-எளிய மக்கள் அரிசியையும், நடுத்தர மக்கள் மற்ற பொருட்களையும் ரேசன் கடைகளில் இருந்து வாங்குகிறார்கள். ஒரே ரேசன் கார்டு திட்டம் வந்தால் தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் அது பாதிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு திட்டத்தை தமிழக அரசு ஏற்குமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்