Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2350 விநாயகர் சிலைகள் சென்னையில் இன்று கடலில் கரைப்பு

செப்டம்பர் 08, 2019 08:18

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த சிலைகள் கடந்த 2 நாட்களாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன. இன்று கடைசி நாள் ஊர்வலம் சென்னையில் நடைபெற்றது. இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் இன்று கரைக்கப்பட்டன.

இன்று மட்டும் சென்னையில் 6 இடங்களில் 2350 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. பட்டினம் பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகளும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகளும் இன்று பலத்த பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன. சென்னை மாநகரில் இன்று மட்டும் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் கடலில் கரைக்கும் நிகழ்ச்சிக்காக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஊர்வல பாதைகளில் அதிரடிப்படையினரும் நிறுத்தப்பட்டிருந்தனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று போக்கு வரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.

வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசன்ட் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கச்சேரி சாலை, தெற்கு கெனால் பேங்க சாலை வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி செல்லாமல் மாற்றுப்பாதையில் சென்றன.

அடையாரில் இருந்து பாரிமுனை சென்ற வாகனங்கள் ராமகிருஷ்ணாமடம் ரோடு வழியாக மந்தைவெளி, லஸ்கார்னர், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மணிக்கூட்டு ஓயிட்ஸ் ரோடு, ஸ்மித் ரோடு அண்ணாசாலை வழியாக சென்றன.
 

தலைப்புச்செய்திகள்