Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவிலிருந்து காய்கறி ஏற்றுமதி நிறுத்தம்: பாகிஸ்தானில் தக்காளி விலை கடும் உயர்வு

பிப்ரவரி 25, 2019 07:30

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு இந்திய விவசாயிகள் காய்கறிகளை அனுப்ப மறுத்து ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்திவிட்டதால், அங்கு தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் துணை ராணுவனத்தினர் 40 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது இருப்பது தெரியவந்தது. 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தானுக்குள் செல்லும் ராவி, சட்லெட்ஜ், பியாஸ் ஆகிய நதிகளின் நீரை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்தார். 

இந்த நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விவசாயிகளும் பாகிஸ்தானுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளனர். 

மத்திய பிரதேச மாநிலம் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் இருந்து பாகிஸ்தானுக்கு தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அனுப்புவது வழக்கம். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு இந்திய விவசாயிகள் காய்கறிகளை அனுப்ப மறுத்து ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்தி விட்டனர். 

இதன் காரணமாக பாகிஸ்தானில் தக்காளி விலை கிலோ ரூ. 250 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தினமும் 50 முதல் 70 லாரிகளில் தக்காளிகள் அனுப்பப்பட்டு வந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தினமும் 3 ஆயிரம் டன் தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. 

மற்ற நாடுகளிடம் இருந்து பெறுவதை விட இந்தியாவிடம் இருந்தே பாகிஸ்தான் குறைந்த விலையில் தக்காளியை பெற்று வந்தது. தற்போது காய்கறி ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

மேலும் பாகிஸ்தானில் பச்சை மிளகாய் கிலோ ரூ. 160-க்கும், சிவப்பு மிளகாய் ரூ. 300-க்கும், இஞ்சி ரூ. 150-க்கும், உருளைக்கிழங்கு ரூ. 70-க்கும், வெங்காயம் ரூ. 90-க்கும், கத்தரிக்காய், வெண்டைக்காய் தலா ரூ. 110-க்கும் விற்கப்படுகிறது. 

தலைப்புச்செய்திகள்