Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சேலம்: அரசு அச்சகத் துறையில் முதல்வரின் உத்தரவுப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு 13 சதவீதத்துக்கு மேல் பணிவாய்ப்பு அளிக்கப்பட் டுள்ளது என அமைச்சர் கடம்பூர்ராஜூ தெரிவித்துள்ளார்.
சேலம் அரசு கிளை அச்சகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்ராஜு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சேலம் அரசு அச்சகத்தில் கருவூலத்துறை, வேளாண்துறை, மருத்துவத்துறை, தேர்வுத்துறை, பல்கலைக்கழக விடைத்தாள்கள், காவல்துறை படிவங்கள் உள்ளிட்டவற்றுக்கான முக்கிய படிவங்கள் அச்சிடப்படுகின்றன.
சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களுக்கான அரசிதழ்களும் இங்கு அச்சிடப்படுகிறது. இங்கு உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆவணங்கள் அச்சிடப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளன.
சேலம் அரசு கிளை அச்சகம் சுமார் 2.87 ஹெக்டேர் பரப்பளவில் இயங்கி வருகிறது. இதற்கு புதிய கட்டிடம் கட்டப்படும். இந்தியாவில் தமிழகத்தில்தான் அரசின் ஆவணங்கள் அனைத்தும் அரசு அச்சகங்களில் அச்சிடப்படுகின்றன.
தமிழகத்தில் மற்ற துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நிலையில், அரசு அச்சகத் துறையில் முதல்வரின் உத்தரவுப்படி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 சதவீதத்துக்கு மேல் பணிவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அரசு அச்சகங்களின் மூலம் அனைத்துத் துறைகளுக்கும் தேவையான ஆவணங்களை 100 சதவீதம் அச்சிடும் நிலை மேம்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்