Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அக், 2 முதல் நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்

செப்டம்பர் 16, 2019 05:58

டெல்லி: நாடு முழுவதும் நிலுவையில் உள்ள 1.66 லட்சம் பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்க 1,023 சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விரைவு நீதிமன்றங்கள் வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு நீதி மன்றங்களில் 1,66,882 பாலியல் வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க மாவட்டம்தோறும் விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை இறுதியில் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்க ரூ.762.25 கோடி செலவில் நாடு முழுவதும் 1,023 விரைவு நீதிமன்றங் களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் 389 விரைவு நீதிமன்றங்கள், சிறார்கள் தொடர்பான பாலியல் வழக்குகளை (போக்சோ) மட்டும் விசாரிக்கும். இதர 634 நீதிமன்றங்கள் அனைத்து பாலியல் வழக்குகளையும் விசாரிக்கும்.ஒரு விரைவு நீதிமன்றம், 3 மாதங்களில் 42 வழக்குகளில் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் முதல் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: முதல்கட்டமாக 9 மாநிலங்களில் 777 சிறப்பு விரைவு நீதிமன்றங்களும் இரண்டாம் கட்டமாக 246 சிறப்பு விரைவு நீதிமன்றங்களும் அமைக் கப்படும். தேசிய குற்ற ஆவண பதிவேட்டின்படி போக்சோ சட்டத்தில் 90,205 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட போக்சோ சட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தால் அந்த மாவட்டத்தில் சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

விரைவு நீதிமன்ற திட்டத்தை செயல்படுத்த மகாராஷ்டிரா, திரிபுரா, மேற்குவங்கம், மேகாலயா, ஜார்க் கண்ட், ஆந்திரா, பிஹார், மணிப்பூர், கோவா, மத்திய பிரதேசம், கர்நாடகா, மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், உத்தராகண்ட், தமிழகம், அசாம், ஹரியாணா உள்ளிட்ட 18 மாநிலங்கள் முன்வந்துள்ளன. விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட பிறகு அந்த நீதிமன்றங்களின் செயல்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணிக்கும். விரைவு நீதிமன்றத்தின் வழக்குகளை விசாரிக்கும் விதம் குறித்து மத்திய சட்ட அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்யும். அதற்கேற்ப விரைவு நீதிமன்றங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும். இவ்வாறு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தலைப்புச்செய்திகள்