![](admin/uploads/.63a6f37e4b2b19.05924386.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொடுக்காத ஆத்திரத்தில், அச்சிறுமியை ஆம்னி வேனில் கடத்த முயன்றவர்களை சினிமா பாணியில் துரத்திப் பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மணப்பாறையை அடுத்த நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியும் 17 வயதான அவரது மகளும் துலுக்கம்பட்டியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர்.
புதன்கிழமை இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இருவரையும் ஆம்னி வேனில் வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல், தந்தையை தாக்கிவிட்டு சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர். கூச்சலிட்டுக் கொண்டே பின்னால் சென்ற தந்தையையும் அந்த கும்பல் வேனில் திணித்துக்கொண்டு திருச்சி நோக்கி வேகமாகச் சென்றுள்ளது.
தந்தை-மகளின் அபயக்குரலைக் கேட்ட சாலையில் சென்றவர்கள், வேனை துரத்திச் சென்றுள்ளனர். இதற்குள் பொன்னம்பலப்பட்டி சுங்கச்சாவடிக்கு தகவல் பறந்து, அங்கிருந்தவர்கள் வேனை மடக்கிப் பிடிக்கத் தயாராக இருந்துள்ளனர்.
இதனைக் கண்ட கடத்தல் கும்பல் வேனை மீண்டும் திண்டுக்கல் நோக்கி திருப்பியுள்ளது. இதற்குள் இந்தத் தகவல் மணியாரம்பட்டி, கல்பட்டி மக்களுக்கு தெரியவந்து அவர்களும் வேனை மடக்க முயன்றனர். அது தோல்வியுற்ற நிலையில், பக்கிரிக்காடு அருகே பொதுமக்கள் சாலை நடுவே நின்றிருப்பதைப் பார்த்து வேனை ஓட்டிவந்தவன் சடாரென பிரேக் அடித்திருக்கிறான். இதில் நிலை தடுமாறிய வேன் தலைக்குப்புறக் கவிழ்ந்தது.
உடனடியாக காரை சூழ்ந்த மக்கள், சிறுமியையும் அவரது தந்தையையும் மீட்டு பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டு, கடத்தல் கும்பலை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். கடத்தல் கும்பலில் 2 பேர் தப்பியோடிவிட, சிக்கிய 3 பேரை பொதுமக்கள் புரட்டி எடுத்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், பலத்த தாக்குதலுக்கு உள்ளான மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதற்கட்ட விசாரணையில் சிறுமியை கடத்தியவர்களில் ஒருவர் பெயர் குழந்தைவேல் என்றும் அவர் இந்து முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் என்றும் சிறுமியை அவர் ஒருதலையாக காதலித்ததும் தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
சிறுமியின் தந்தையிடம் பெண் கேட்டு அவர் கொடுக்க மறுத்ததால் நண்பர்களுடன் சேர்ந்து அவரை கடத்த முயன்றுள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர். கடத்தலில் ஈடுபட்டதாக 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகவுள்ள குழந்தை வேலுவையும் அவரது நண்பன் செல்லபாண்டி என்பவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வேனில் சிக்கிய மூன்று பேரை தாக்கியதாக பொதுமக்கள் சிலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.