![](admin/uploads/.62f9fafa2ed1a3.69238732.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நெல்லை: இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜஹரான் ஹசிமினுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) கடந்த ஜூன் 12ந்தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை வந்தனர். அவர்கள் கோவை உக்கடம் பகுதியில் 7 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி தோட்டாக்கள், செல்போன்கள் உள்பட பல்வேறு மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஷாஜகான், முகமது உசேன், ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்
இந்நிலையில், கோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த ஜூன் 16ந்தேதி சோதனையில் ஈடுபட்டனர். மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த சதகதுல்லா என்ற இளைஞரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று, இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலுடன் உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ந்து சென்னையில் மண்ணடி மற்றும் புரசைவாக்கத்தில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த ஜூலை 13ந்தேதி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதன்பின்பு, கடந்த ஆகஸ்டு 29ந்தேதியன்று காலை 5 மணி முதல் உமர் பாரூக், சனாபர் அலி, சமீனா முபின், முகமது யாசீர் மற்றும் சதாம் உசேன் ஆகியோரது வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனிடையே, நெல்லையில் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளியில் திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். திவான் முஜிபூர் வளைகுடா நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் வேலை செய்துள்ளார். அவரது வீட்டில் இன்று காலை 7 மணியில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.