Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஜகவுக்கு எதிராக முக்கியப் பிரச்சினைகளை சட்டப்பேரவை தேர்தல்களில் முன்னிறுத்த காங்கிரஸ் முடிவு

செப்டம்பர் 21, 2019 10:29

புதுடெல்லி: வரவிருக்கும் பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், பாஜகவிற்கு எதிராகப் பல முக்கிய பிரச்சினைகளை முன்னிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை மற்றும் போக்குவரத்து மீறலின் அபராதம் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன. இன்று ஹரியாணா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்விரண்டு மாநிலங்களும் விவசாய முக்கியத்துவம் பெற்றவை.

இங்குள்ள ஆட்சியை பாஜகவிடம் இருந்து பறிக்க வேண்டி காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பின் நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் காங்கிரஸை பிரச்சாரத்துக்காக உற்சாகப்படுத்தியுள்ளன. குறிப்பாக, வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை மற்றும் புதிய போக்குவரத்து சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கடும் அபராதம் ஆகியவற்றை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற காங்கிரஸ் முயல்கிறது. 

இத்துடன் சில முக்கிய அறிவிப்புகளும் தனது தேர்தல் வாக்குறுதிகளில் வெளியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.இது குறித்து காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ''நாட்டின் இன்றைய பொருளாதார மோசமான நிலையால் ஒவ்வொரு குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து ராகுலும், பிரியங்காவும் கண்டித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

வரும் தேர்தலில் வேலையில்லா இளைஞர்களுக்காக நாம் திட்டமிடும் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெற்றியை தேடித்தரும்'' எனத் தெரிவித்தனர். இந்திய பெருநிறுவனத் தொழில் அதிபர்களும் தமக்கு ஆதரவாக திரும்பத் தொடங்கி இருப்பதாக காங்கிரஸ் கருதுகிறது. இந்த சூழலை வைத்து வரும் தேர்தல்களில் வெற்றி தனது கட்சிக்கு சாதகமாகவே இருக்கும் எனவும் காங்கிரஸ் நம்பி வருவது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்