Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகம் எப்படி வளர்ந்திருக்கும்? நடிகர் ராதாரவி

செப்டம்பர் 22, 2019 09:31

சென்னை: தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகம் எப்படி வளர்ந்திருக்கும்? நான் தமிழர் என்று சொல்லிக்கொள்வதே வீண் என்று நடிகர் ராதாரவி பேசியுள்ளார்.

தமிழக தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடிகவேள் எம்.ஆர் ராதா அவர்களின் 40-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

விழாவில் கலந்துகொண்ட நடிகர் ராதா ரவி பேசியதாவது:-

தமிழகத்தின் அமைச்சரவை அமைப்பதற்கு பெரும் தூணாக இருப்பது தெலுங்கு இனம்தான். தேனி முதல் திண்டுக்கல் விருதுநகர், சிவகாசி வரை தெலுங்கு மக்கள் தான் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தெலுங்கு இனத்தை ஆதரிப்பவர்கள்தான் இதுவரை தமிழகத்தில் வெற்றி பெற்றிருப்பார்கள். கிருஷ்ண தேவராயர் இல்லை என்றால் மதுரை நகரம் வளர்ந்திருக்காது

தமிழகத்தில் கல்லூரிகள், தொழிற்சாலை உரிமையாளர்களாக அதிகம் தெலுங்கு பேசும் மக்கள்தான் இருக்கிறார்கள். கருணாநிதிக்கு கலைஞர் என்ற சொல்லை கொடுத்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா.

திராவிட இயக்கம் என பெயர்வைத்து ஏமாற்றுபவர்கள் மத்தியில் 39 ஆண்டுகளாக இந்த விழா நடைபெருகிறது. எம்.ஆர்.ராதாவை திராவிட இயக்கம் மறந்துவிட்டது. தெலுங்கனின் விழாவை தெலுங்குகாரன்தான் கொண்டாடுகிறான். இனி தமிழன் என்று சொல்லிக்கொள்வது வீண்.

விழாவில் அண்ணதானம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடத்தபட்டது. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ராதா ரவி, “முதல்வரை சந்தித்து தெலுங்கு இனத்திற்கு என்ன தேவை என முறையிடுவோம். இனத்தை பற்றி தவறாக பேசுபவர்கள் முதலில் அவர்கள் யார் என்பதை திரும்பி பார்க்க வேண்டும்.

நாங்கள் திராவிடர்கள் திராவிடத்தை வைத்து பேசுகிறோம். தெலுங்கை விலக்கி வைத்து யாரும் பார்த்திட முடியாது. தமிழகத்தில் தெலுங்கு மக்கள் இல்லை என்றால் ஒரு பகுதிக்கு வேட்பாளர்களே இருக்க மாட்டார்கள்

மிக விரைவில் தெலுங்கு மாநாடு நடைபெரும்... என் மொழியை நான் கற்கவேண்டும்” என்றார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக தெலுங்கு மக்கள் மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த மருத்துவர் சுரேந்தர் ரெட்டி, “ இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் மொழிப் பிரச்னை உள்ளது. மற்ற மாநிலங்களில் அவர் அவர் தாய் மொழியை கற்கும் நிலை இருக்கும் போது தமிழகத்தில் மட்டும் அப்படி இல்லை” என்றார்.

தலைப்புச்செய்திகள்