![](admin/uploads/.636a22757a8578.78515254.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கண்டிரமாணிக்கம் குச்சிபாளையம் சாலையை சேர்ந்தவர் செல்வம்.இவரது மகள் திவ்யா(வயது 11), மகன் ஸ்ரீராம்(8). திவ்யா 8-ம் வகுப்பும், ஸ்ரீராம் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள திருமலைராஜன் ஆற்றுக்கு திவ்யாவும் அவரது தம்பி ஸ்ரீராமும் குளிக்க சென்றனர். அப்போது ஆற்றில் அதிகமாக தண்ணீர் சென்று கொண்டிருந்தது.
அப்போது ஆற்றில் திவ்யா திடீரென ஆழமான பகுதிக்கு சென்றாள். இதனால் தண்ணீரில் மூழ்கிய அவளை காணாமல் தவித்த தம்பி ஸ்ரீராம் தனது அக்காள் குளித்த பகுதிக்கு சென்றான். அப்போது அவனும் தண்ணீரில் மூழ்கினான். இதைக்கண்ட அருகில் இருந்த சிறுவர்கள் உடனே வீட்டுக்கு ஓடி சென்று நடந்த சம்பவத்தை திவ்யாவின் தாய் கவிதாவிடம் கூறினர். மகனும், மகளும் தண்ணீரில் மூழ்கியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கவிதா அக்கம் பக்கத்தினருடன் ஆற்றுக்கு ஓடி வந்தார்.
அப்போது சிலர் ஆற்றில் குதித்து அக்காள்-தம்பி இருவரையும் தேடினர். சிறிது நேர தேடுதலுக்கு பின் தண்ணீரில் மூழ்கியிருந்த திவ்யா- ஸ்ரீராம் ஆகிய இருவரையும் கரைக்கு தூக்கி வந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே திவ்யாவும், ஸ்ரீராமும் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மயிலாடி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் வெங்கடேசன்(12). 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
வெங்கடேசன் பள்ளிக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் திருவாஞ்சியத்தில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு சென்றான். அங்கு தனது தாத்தா வீட்டின் எதிர்வீட்டில் வசிக்கும் கஞ்சமலை மகன் விக்னேஸ்வரனுடன்(7) புத்தாற்றுக்கு குளிக்க சென்றான். இருவரும் குளிக்க சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர் ஆற்றுக்கு தேடிச்சென்றனர். அப்போது ஆற்றங்கரையில் சைக்கிள் மற்றும் உடைகள் கிடந்தன. மேலும் விக்னேஸ்வரன், வெங்கடேசன் ஆகிய இருவரும் ஆற்றில் மூழ்கி இறந்து பிணமாக மிதந்து கொண்டிருந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர் கதறி அழுதனர்.
இது குறித்து தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விக்னேஸ்வரன், வெங்கடேசன் ஆகிய இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.