Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நவம்பரில் உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல்

செப்டம்பர் 27, 2019 04:04

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்களின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ந்தேதியுடன் முடிவடைந்தது. 

உள்ளாட்சி அமைப்புகளில் எஸ்.சி. எஸ்.டி., பிரிவுகளுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்தது. தமிழக தேர்தல் ஆணையம் இதை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணையால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

சுப்ரீம் கோர்ட்டும் சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது, அக்டோபர் மாதத்துக்குள் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது.

அதன்படி உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கி உள்ளது. 

தேர்தல் நடத்த 1 லட்சத்து 45 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் கட்டுப்பாட்டு கருவிகளும், ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஓட்டுபோடும் எந்திரம் (பேலட் யூனிட்) கருவிகள் தற்போது கைவசம் உள்ளன.

மீதம் உள்ள சுமார் 50 ஆயிரம் மின்னணு எந்திரங்களை கர்நாடக மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து வாங்கப்பட்டு வருகிறது. இந்தப்பணி வரும் அக்டோபர் முதல் வாரத்தில் நிறைவடையும். அதற்கு பிறகு அக்டோபர் 15-ந்தேதி வரை வெளிமாநில மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்யப்படுகிறது. 

அக்டோபர் மாதம் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு, நவம்பரில் தேர்தல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய 3 அமைப்புகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் ஓட்டுப் பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தலைப்புச்செய்திகள்