![](admin/uploads/.5e8d7cbf2cfb20.44747600.jpg)
Sunday, 30th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 846 இடங்கள் விபத்துகள் அதிக நேரிடும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 38 சதவீத உயிரிழப்புகள், சாலை விபத்துகளில் நேரிடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் 846 இடங்களை விபத்துகள் அதிகம் நேரிடும் இடங்களாக அடையாளம் கண்டுள்ளது.
அந்த இடங்கள் அடங்கிய பட்டியல், சாலை பாதுகாப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து தமிழக தலைமை செயலாளர், நெடுஞ்சாலை துறை செயலர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை பிராந்திய அலுவலகத்துக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
இதன்படி, சென்னையில் சிடிஎச் சாலையில் மண்ணூர்பேட்டையில் அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ்ச் பகுதிதான் கடந்த 3 ஆண்டுகளில் அதிகம் விபத்து நேரிட்ட சந்திப்பு பகுதி என்றும், அங்கு 775 விபத்துகள் நடந்துள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள நஸரத்பேட்டை சந்திப்பில் அதிக எண்ணிக்கையில் 520 விபத்துகள் நடந்துள்ளன என்றும், இதையடுத்து தாம்பரம்-புழல் பைபாஸ் சாலையில் போரூர் டோல்கேட் பகுதியில் 423 விபத்துகள் நடந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 3 இடங்களிலும் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.