Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குஜராத் கலவரத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு, அரசு வேலை, ரூ.50 லட்சம்: சுப்ரீம் கோர்ட்

செப்டம்பர் 30, 2019 09:04

புதுடெல்லி: குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது டாஹோட் மாவட்டம், ரந்திக்பூர் கிராமத்தை சேர்ந்த பில்கிஸ் பானோ (அப்போது வயது 19) என்ற 5 மாத கர்ப்பிணிப் பெண் 10-க்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 

மேலும், அவரது குழந்தைகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்தது. இவ்விவகாரத்தில் குஜராத் மாநில அரசு வழங்கிய நிதியுதவி ரூ.5 லட்சத்தை ஏற்க மறுத்த பில்கிஸ் பானோ சுப்ரீம் கோர்ட்டு சென்று கூடுதல் நிவாரணம் கோரினார்.

இவ்வழக்கு விசாரணையை மேற்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு,  குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் வழங்குமாறு கடந்த ஏப்ரல் மாதம் குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. 

மேலும் அரசு வேலை மற்றும் வீடு வழங்கவும் இவ்வழக்கில் ஏற்கனவே குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அதிகாரிகள் மீது இரண்டு வாரங்களுக்குள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகியும் அவருக்கு எந்த நிவாரணமும் அளிக்கப்படாத நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னர் ஆஜரான குஜராத் அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த தீர்ப்பு தொடர்பாக சீராய்வு செய்ய வேண்டும் என கோரினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்னும் 2 வாரங்களுக்குள் பில்கிஸ் பானோவுக்கு அரசு வேலை, வீடு மற்றும் 50 லட்சம் ரூபாய் வழங்குமாறு அம்மாநில அரசுக்கு  சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்