Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அக்.4-ம் தேதி சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்: வேலை வாய்ப்பற்றோர் பயனடைய அழைப்பு

செப்டம்பர் 30, 2019 02:01

சென்னை: அக்டோபர் மாதம் 4-ம் தேதி அன்று சென்னையில் உள்ள அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. 1000-க்கும் மேற்பட்ட தனியார் வேலை வாய்ப்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேலை வாய்ப்பு ஆணையர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமையானது வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வரும் அக்டோபர் 4-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை-32, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.

இம்முகாமில் 35 வயதிற்கு உட்பட்ட 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவிக்கும் தனியார் துறை நிறுவனங்கள், பணியாளர்கள் / ஆட்கள் தேவைப்படும் நேர்காணலில் தங்கள் நிறுவனத்தின் முழுமையான காலிப் பணியிட விவரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தங்கள் நிறுவனத்திற்கான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இச்சேவைக்கு கட்டணம் ஏதுமில்லை.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் / தனியார் துறை நிறுவனங்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்