Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி: கல்லூரி உதவி பேராசிரியரை கடத்திய அதிமுக பிரமுகருக்கு போலீசார் வலைவீச்சு

செப்டம்பர் 30, 2019 02:21

திருச்சி: திருச்சியில் இந்திரா காந்தி மகளிர் கல்லூரி உதவி பேராசிரியையை அதிமுக பிரமுகர் கடத்த முயன்றதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மலைக்கோட்டை  பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் ஆங்கில உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். வழக்கம் போல் தனது தோழியுடன் கல்லூரிக்கு புறப்பட்ட மகாலட்சுமியை அதிமுக பிரமுகர் வணக்கம் சோமு என்பவர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்து கடத்த முயன்றுள்ளார். அச்சமயம் இருவரும் கூச்சலிடவே தோழியை தள்ளிவிட்ட வணக்கம் சோமு மகாலட்சுமியை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கடத்தி சென்றுள்ளார். இது தொடர்பாக மகாலட்சுமியின் தாய் நாகலட்சுமி அளித்த புகாரின் பேரில் கோட்டை காவல்நிலைய போலீசார் உடனடியாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் செல்போன் சிக்னல் மூலமாக துவரங்குறிச்சி அருகே வாகனம் சென்று கொண்டிருந்ததை அறிந்த போலீசார் பிற காவல் நிலையங்களுக்கும் தகவல் அளித்து விரட்டி சென்றுள்ளனர். இதனை அறிந்த வணக்கம் சோமு மகாலட்சுமியை துவரங்குறிச்சி பகுதியிலேயே இறக்கிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதையடுத்து மகாலட்சுமியை மீட்ட போலீசார் வணக்கம் சோமுவை வலை வீசி தேடி வருகின்றனர். இதை தொடர்ந்து தந்தை இல்லாத மகாலட்சுமிக்கு திருமண ஏற்பாடு நடைபெற்று வரும் நிலையில் ஒருதலை காதல் காரணமாக வணக்கம் சோமு கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. அதிமுக வட்ட பொருளாளரும், அமராவதி கூட்டுறவு சங்க இயக்குனருமான வணக்கம் சோமுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.    

தலைப்புச்செய்திகள்