Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவாவில் நிர்வாண பார்ட்டி போஸ்டர் விவகாரம்: சிக்கிய இளைஞரின் வாக்குமூலம்

அக்டோபர் 02, 2019 01:15

கோவா: கோவாவின் வடக்குப் பகுதியில், நிர்வாண பார்ட்டி நடக்க இருப்பதாகவும் இதில் 10-15 வெளிநாட்டு பெண்களும் பத்துக்கும் மேற்பட்ட இந்தியப் பெண்களும் கலந்துகொள்ள இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

எங்கு எப்போது நடக்க இருக்கிறது என்கிற விவரம் அதில் இடம்பெறவில்லை. இந்த பார்ட்டி போஸ்டர், சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதையடுத்து கோவா மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் பிரதிமா கோட்டின்ஹோ, முதலமைச்சர் பிரமோத் சாவந்தும் சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகரும் இதுபோன்ற நிகழ்ச்சி நடக்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

உஷாரான போலீசார், தங்கள் சோதனையை தீவிரப்படுத்தினர். ‘கோவாவில் எந்த நிர்வாண பார்ட்டியையும் அனுமதிக்க மாட்டோம்’ என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.

தீவிர விசாரணைக்குப் பிறகு நிர்வாண போஸ்டர் ஒட்டியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போலீசிடம் கூறும்போது, ”கல்லூரி படிப்பை பாதியிலேயே முடித்துவிட்டேன். பணம் சம்பாதிக்க என்ன பண்ணலாம் என்று யோசித்தேன்.

அதற்காக இணையதளத்தில் இருந்து சில புகைப்படங்களை எடுத்து போஸ்டரை தயாரித்து ஒட்டினேன். இதற்கு முன்பணம் பெற முடிவு செய்திருந்தேன். அதன் மூலம் சபலம் கொண்ட நபர்களிடம் இருந்து ஏராளமான பணத்தை சுருட்டிவிட வேண்டும் என்பதுதான் என் திட்டம்.

ஆனால் நான் எதிர்பார்த்ததற்கு அதிகமாகவே போன் அழைப்புகள் வந்துவிட்டது. வெளிநாட்டில் இருந்தும் அழைப்புகள் வந்தது. இவ்வளவு அழைப்புகள் வரும் என்று எதிர்பார்க்க வில்லை. இதனால் எனக்கு பயம் ஏற்பட்டது. போனை அணைத்துவிட்டேன். ஆன் செய்தபிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டேன்” என்று அப்பாவியாக தெரிவித்துள்ளார்.

நிர்வாண போஸ்டர் மூலம் ஏமாற்றி பணம்பறிக்க முயன்ற அந்த இளைஞரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்