Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்டிரல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில் தனது காதல் மனைவியை மாட்டி விட முயன்ற ஆசாமி கைது செய்யப்பட்டார்.
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 5.40 மணிக்கு மர்ம நபர் செல்போனில் தொடர்பு கொண்டார். அதில் அவர், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு முன்னி என்ற பெண் வெடிகுண்டு வைத்ததாக தகவல் தெரிவித்துவிட்டு செல்போனை அணைத்து விட்டார்.
உடனே கண்காணிப்பு அறையில் இருந்த போலீசார், சென்டிரல் ரெயில்வே போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். உடனே ரெயில்வே போலீசார் சென்டிரல் ரெயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த தீவிர சோதனையில் வெடிகுண்டு வைத்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் போலீசாரை திசைதிருப்பும் நோக்கில் யாரோ தவறான செய்தியை அளித்துள்ளனர் என்றும் போலீசாருக்கு தெரியவந்தது.
மேலும் இந்த வதந்தியை பரப்பிய மர்ம ஆசாமி யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்பு அறைக்கு அந்த மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணைக் கொண்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபர் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சரவணன் (வயது 37) என்று தெரியவந்தது.