Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை என்றால் தொடர் போராட்டம்: மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு

அக்டோபர் 10, 2019 04:54

சென்னை: இடைத்தேர்தல் முடிந்தவுடன் கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை எனில் திட்டமிட்டபடி தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கூட்டம் நடைபெற இடம் கொடுக்க வலியுறுத்தி சென்னை ராஜூவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாக முன்பு அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்ந்த மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், ''கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. இதில் எங்கள் கோரிக்கைகளான மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களின் பணியிடங்களை குறைக்கக்கூடாது, மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்களை கலந்தாய்வு மூலம் மட்டுமே பணிநியமனம் செய்ய வேண்டும், மருத்துவ மேற்படிப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் ஏற்கனவே இருந்த 50% இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வரவேண்டும்.

கோரிக்கையை நிறைவேற்ற 6 வார கால அவகாசம் கொடுக்கப்பட்டது. நேற்றுடன் அந்த அவகாசம் முடிந்த நிலையில் கோரிக்கைகள் குறித்து அமைச்சரிடம் பேசியதில் இடைத்தேர்தல் நடப்பதால் கோரிக்கைகள் குறித்து முடிவு எடுக்க முடியாது என அமைச்சர் தெரிவித்ததார்.

தேர்தல் முடிந்து எங்கள் கோரிக்கை நிறைவேற்றபடவில்லை என்றால், வரும் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் தொடரும் என  தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்