![](admin/uploads/.603e04c92120b0.00910922.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தேவகோட்டை: தேவகோட்டையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வந்த பெண்ணிடம் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
தேவகோட்டை அருகே சித்தானூர் வடக்கு குடியிருப்பைச் சேர்ந்த வளர்மதி (50). இவர் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை தேவகோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள ஏடிஎம்-ல் ரூ.20 ஆயிரம் எடுக்க வந்துள்ளார். பணம் எடுக்க முடியாமல் தடுமாறிய அவரிடம், அங்கிருந்த ஒருவர் பணம் எடுத்து தருவதாகக் கூறி ஏடிஎம் கார்டை வாங்கினார்.
முதல் தவணையாக ரூ.10 ஆயிரம் எடுத்துவிட்டு, அதற்குமேல் எடுக்க முடியவில்லை என கூறி தன்னிடம் இருந்த போலி ஏடிஎம் கார்டை வளர்மதியிடம் கொடுத்துள்ளார். வளர்மதி அங்கிருந்து சென்றதும், அதே ஏடிஎம்-ல் ரூ.10 ஆயிரம் எடுத்து கொண்டு அந்த நபர் தலைமறைவானார்.
அவர் பணம் எடுத்ததும் வளர்மதி மொபைல் போனுக்கு எஸ்எம்எஸ் வந்ததால், தான் ஏமாற்றமடைந்தது தெரியவந்தது.இதுகுறித்து தேவகோட்டை டவுன் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் ஏடிஎம் சிசிடிவி கேமரா பதிவு மூலம் அந்த நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) அவரை போலீஸார் பிடித்தனர். விசாரணையில் அவர் தேவகோட்டை ஞானதந்தகிரி நகரைச் சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.