![](admin/uploads/.5ea03765f1a2c2.29470801.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் 4-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டி போஸ்டல் காலனியில் கீரின் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவையை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து பள்ளி, நீட் பயிற்சி மையம், பள்ளியின் தாளாளர் சரவணன் மற்றும் இயக்குனர்கள் வீடுகளில் கடந்த 11 ஆம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதே போல் சார்பு நிறுவனங்களான பெருந்துறை கிரீன் கார்டன் மெட்ரிக் பள்ளி, கரூர் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, சென்னை கிரீன் பார்க் அகடாமிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் கணக்கில் காட்டப்பட்டாத 150 கோடி ரூபாய் வருமானம் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாமக்கல் கிரீன் பார்க் பள்ளி கலையரங்கத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 30 கோடி ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் 4-வது நாளான இன்று காலை 7 மணி முதல் கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும், அதே போல் கல்வி நிறுவனங்களின் பணிபுரியும் சிலருக்கும் முறைகேடாக பணப் பரிவர்த்தனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கிரீன்பார்க் பள்ளியின் நீட் பயிற்சி மையத்தில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.