Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிஷப் சித்திரவதை: போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரி புகார்

அக்டோபர் 23, 2019 12:14

கோட்டயம்: கேரளாவில், பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிஷப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரி லுாசி, தான் சித்ரவதை செய்யப்படுவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ என்பவர், தனக்கு கீழ் பணியாற்றிய கேரள கன்னியாஸ்திரி ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், கடந்த ஆண்டு சிக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி லுாசி என்ற கன்னியாஸ்திரி, மேலும் சில கன்னியாஸ்திரிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினார். 

ரோமன் கத்தோலிக்க தேவாலாயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும், எப்.சி.சி., எனப்படும், 'பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட்' சபையிலிருந்து, கன்னியாஸ்திரி லுாசி நீக்கப்பட்டார். இந்த முடிவை எதிர்த்து லுாசி, வாடிகனில் புகார் கூறியிருந்தார்.

மேலும், லுாசி, தான் தங்கியிருந்த கான்வென்டில் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டதாகவும், போலீசார் வந்து கதவை திறந்து விட வேண்டியிருந்ததாகவும், கேரள மாநிலம், வெல்லமுண்டா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். 

இந்த புகார் அளித்தது குறித்து விளக்கம் அளிக்கும்படி லுாசிக்கு, எப்.சி.சி., 'நோட்டீஸ்' அனுப்பியது. புகார் அளித்ததற்காக மன்னிப்பு கேட்கும்படியும் அந்த நோட்டீசில் கூறப்பட்டது.

இந்நிலையில் பிஷப்புக்கு எதிராக லூசி, மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டதாவது: 

பாலியல் புகார் அளிக்கப்பட்டதில் இருந்து நான் பலவிதமான அவமானங்களுக்கும், அச்சுறுத்தலுக்கும்ஆளானேன்.தேவாலய அதிகாரிகள் எனக்கும் எனது துணை கன்னியாஸ்திரிகளுக்கும் எதிராக தவறான கருத்துகளை சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். பிஷப் பிராங்கோவும் அவரது குழுவும் இதற்கு பின்னால் இருக்கிறார்கள் என நினைக்கிறோம். இதனால் பலவிதங்களில் சித்ரவதை அனுபவித்து வருகிறோம். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்