![](admin/uploads/.5d80d554c078a4.86588876.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாலையம்பட்டி: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்த நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கடந்த வருடம் கைது செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்ததாக கருப்பசாமி, முருகனும் கைதானார்கள். 6 மாதத்துக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
இவர்கள் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த பின்னர் நிர்மலாதேவியின் நடவடிக்கைகளில் மாறுதல் ஏற்பட்டது. சில நேரங்களில் சுயநினைவின்றி தானாக பேசிக்கொள்வது மற்றும் வினோதமான செயல்களில் ஈடுபட்டு வந்தார். கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு ஒவ்வொரு முறை ஆஜராகும்போதும் நிர்மலாதேவியின் நடவடிக்கைகளால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் நிர்மலாதேவி கைது செய்யப்பட்ட பின்னர் அவரது குடும்பத்தினர் கைவிட்டனர். இதனால் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியன் நகரில் நிர்மலாதேவி தனியாக வசித்து வருகிறார்.
இன்று அதிகாலை திடீரென மனநலம் பாதிக்கப்பட்டது போல் இருந்த நிர்மலாதேவி, வீட்டில் இருந்த பாத்திரங்கள் மற்றும் சேர் போன்ற பொருட்களை எடுத்து ரோட்டில் வீசினார். மேலும் கற்களையும் எடுத்து வீசியதில் வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த தங்கப்பிரகாஷ் என்பவரின் கார் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
நிர்மலாதேவியின் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் அன்னராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். நிர்மலாதேவி மனநல பாதிப்பால் இந்த செயலை செய்தாரா? அல்லது வேண்டுமென்றே பொருட்களை ரோட்டில் வீசி பரபரப்பை ஏற்படுத்த முயன்றாரா? என விசாரணை நடந்து வருகிறது.