Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரவு பகலாக, மீட்பு பணி நடந்த இடத்தில் தொடர்ந்து காத்திருந்தார்.
ஆனால், சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை. இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுஜித்தின் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது, மனம் வலிக்கிறது.
எப்படியும் வந்து விடுவாய் என்றுதான் ஊனின்றி, உறக்கமின்றி இரவு பகலாய் இமை மூடாமல் உழைத்தோம். இப்படி எம்மை புலம்பி அழவிடுவாய் என்று எண்ணவில்லை.
கருவறை இருட்டு போல் உள்ளே இருப்பாய் என நினைத்தோம். கல்லறை இருட்டாய் மாறும் என்று எண்ணவில்லை.
மருத்துவமனையில் வைத்து உச்சபட்ட மருத்துவம் வழங்க நினைத்து காத்திருந்தேன். இப்போது மார்ச்சுவரியில் பார்க்கும் நிலையில் இதயம் கனத்துக்கிடக்கிறது.
எண்பத்தைந்து அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சு சத்தம்தான் என்னை மீட்பு பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாச பிணைப்பில் இணைத்து இயங்க வைத்தது.
மனதை தேற்றிக் கொள்கிறேன். ஏனென்றால் இனி நீ கடவுளின் குழந்தை சோகத்தின் நிழலில், வேதனையின் வலியில்..
- அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.