Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவிகளிடம் ஆசிரியர் ஆபாச விளையாட்டு: நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்

நவம்பர் 09, 2019 05:05

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் 37 வயதான சுரேஷ், இவர் அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக உள்ளார்.

இப்பள்ளியில் 49 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் மாணவிகள் சிலரிடம் ஆசிரியர் சுரேஷ் ஆபாசமாக பேசுவதாக பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

புதன்கிழமை இரவு 10 மணிவரை அவரிடம் விசாரணை நடத்திய நாமகிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி உள்ளார். அங்கும் விசாரித்த போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், பாதிக்கப்பட்டதாக புகார் கூறிய மாணவிகளிடம் வட்டார கல்வி அலுவலர்கள் பிரபுகுமார், கணேசன் ஆகியோர் நேரடியாக விசாரணை நடத்தினர்.

நிர்வாண சிலைகளின் படத்தை மாணவிகளிடம் காட்டியதுடன், உடல் அங்கங்கள் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் ஆசிரியர் ஆபாசமாக கூறியதாக மாணவி ஒருவர் தெரிவித்த நிலையில், சில உடல் பாகங்களை அளவெடுத்து குறித்து வரவேண்டும் என மாணவிகளிடம் ஆசிரியர் சுரேஷ் தெரிவித்ததாக புகார் கூறப்படுகிறது.

மாணவிகளின் உடலைத் தொட்டு பேசுவதுடன், கண்ணியக் குறைவாகவும் ஆபாசமாகவும் அழைத்ததாக புகார் தெரிவித்த மாணவிகள் 8 பேரும், அவர் செய்த பாலியல் தொந்தரவுகளை கடிதமாகவே எழுதி வட்டார கல்வி அலுவரிடம் கொடுத்துள்ளனர். ஆனாலும் ஆசிரியர் சுரேஷ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

இது குறித்து வட்டார கல்வி அலுவலர்களிடம் கேட்டபோது, மாணவிகள் கொடுத்த எழுத்துப்பூர்வ ஆவணங்களை மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமாரிடம் விசாரித்த போது, தகவல் தெரிந்ததும் வட்டார கல்வி அலுவர்களிடம் விசாரித்து அறிக்கை அனுப்பும்படி கேட்டுள்ளதாகவும், அறிக்கை வந்ததும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிலளித்தார்.

மாணவிகளின் புகார் குறித்து ஆசிரியர் சுரேஷிடம் விசாரித்தபோது, தான் காவல் நிலையத்தில் இருப்பதால் எதுவும் கூற இயலாது என்றும், அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுமாறும் கூறிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தார்.

தலைப்புச்செய்திகள்