Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நண்பருடன் கார் ரேஸ்: தலைமைக் காவலர் பரிதாப பலி

நவம்பர் 11, 2019 04:08

சென்னை: குரோம்பேட்டை நியூகாலனி 3-வது தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (46). இவர் சேலையூர் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பணி முடித்து, தனது இருசக்கர வாகனத்தில், வீட்டுக்குப் புறப்பட்டுள்ளார். தாம்பரம் கடப்பேரி அருகே அதிவேகமாக வந்த கார் ஒன்று நின்று கொண்டிருந்த தலைமைக் காவலர் வாகனத்தின் மீது பின்னால் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் அதே இடத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், கார் ஓட்டுநரான ஊரப்பாக்கம், காரணை புதுச்சேரியைச் சேர்ந்த ஆதித்யா என்ற கல்லூரி மாணவரைக் கைது செய்தனர். இறந்த ரமேஷுக்கு சுமதி என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர்.

விபத்து குறித்து போலீஸார் விசாரணையில் ஆதித்யா தனியார் கல்லூரியில் இளம்கலை 3-ம் ஆண்டு படித்து வருகிறார் என்பதும் பல்லாவரத்தில் இருந்து நண்பர்களுடன் சேர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்தது.

அதிவேகத்தில் வந்த அவரது கார், சாலையோரத்தில் இருந்த, தடுப்புகளில் மோதி, பின் ரமேஷின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நடந்துள்ளது. மேலும் இவரது நண்பர் விக்னேஷை போலீஸார் தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்