Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை ஐஐடியில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக சக மாணவிகளிடமும், அக்கல்லூரி பேராசிரியர்களிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை ஐஐடியில் எம்.ஏ மானுடவியல் படித்து வந்த கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப், கடந்த 9ம் தேதி விடுதியில் உள்ள அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
சம்பவம் குறித்து அறிந்த கோட்டூர்புரம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடைநிலைத் தேர்வில் அவர் குறைவான மதிப்பெண் எடுத்ததால், அவர் மனஉளைச்சலில் இருந்ததாகவும் அதுவே அவரது தற்கொலைக்கான காரணம் எனவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் இறந்து போன பாத்திமாவின் தாயார் சஜீதா லத்தீப், அவரது சகோதரி மற்றும் அவரது உறவினரும், கொல்லம் மாநகராட்சி மேயரும் மாணவியின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தும்படி கோட்டூர்புரம் போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர். இருப்பினும் அவர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்காததால் போலீசார் விசாரணையை தொடங்காமல் இருந்தனர்.
மேலும் மாணவி தற்கொலை செய்து கொண்டு தான் உயிரிழந்துள்ளார் என்று பிரேதபரிசோதனை முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் கோட்டூர்புரம் போலீசார் மாணவியின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் தொடர்ந்து போலீசாரிடம் கோரிக்கை வைத்து வந்ததால் மாணவியின் தற்கொலைக்கான காரணமென்ன என்பது குறித்த விசாரணையை போலீசார் தொடங்கி உள்ளனர்.
அதன்படி முதல்கட்டமாக பாத்திமாவின் விடுதி அறையில் தங்கி உள்ள சக மாணவிகள் மற்றும் வகுப்பு பேராசிரியர்களிடம் விசாரிக்க கோட்டூர்புரம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.