Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது

நவம்பர் 12, 2019 01:27

மும்பை: மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. மத்திய அரசு பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரை கடிதத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகம் அனுப்பியது.

*பா.ஜ-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இருந்தும் முதல்வர் பதவி பிரச்சனை காரணமாக இந்த கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியவில்லை.  முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதம் காட்டியது. ஆனால் பா.ஜ அதற்கு மறுத்துவிட்டது.

*இந்த நிலையில், மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கடந்த வெள்ளிக்கிழமை தனிப்பெரும் கட்சியான பாஜ.வை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய பலம் இல்லாததால் பாஜ அதற்கு மறுத்து விட்டது.

*அதைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அடுத்த 24 மணி நேரத்தில், அதாவது நேற்று இரவு 7.30 மணிக்குள் முடிவை தெரிவிக்கும்படியும் ஆளுநர் கூறியிருந்தார்.

*சிவசேனாவிடம் 56 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருப்பதால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை பெற அக்கட்சி திட்டமிட்டது. முதல்கட்டமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை உத்தவ் தாக்கரே சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது காங்கிரஸ் எடுக்கும் முடிவை பொறுத்துதான் ஆதரவு தருவது குறித்து முடிவெடுக்க முடியும் என்று சரத் பவார் கூறினார்.

*இதற்கிடையே, சிவசேனாவுக்கு ஆதரவு தருவது குறித்து கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரசுடன் மேற்கொண்டு விவாதிப்பது என காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

*அதைத்தொடர்ந்து, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவை பெற சிவசேனாவுக்கு கூடுதல் நேரம் வழங்க மறுத்த ஆளுநர், 3வது பெரிய கட்சியான சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார். பவார் கட்சிக்கு ஆட்சி அமைக்க 24 மணி நேர அவகாசம் அளித்தார் கவர்னர்.

*இந்த பரபரப்பான சூழ்நிலையில், மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைக்க யாரும் முன்வராத நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

*சட்டப்பேரவை பதவிக் காலம் முடிந்துவிட்டதால் மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.

*இதையடுத்து மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரைந்துள்ளது. 

*இதனிடையே  மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவகாசம் தரவில்லை என உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மனுதாக்கல் செய்துள்ளார். 

*எனினும் அரசியல் சாசனப்படி ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுவதாக ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அறிக்கை விடுத்தார். 

*இறுதியாக மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரை கடிதம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

*இதையடுத்து, மத்திய அரசு பரிந்துரையை ஏற்று மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார் .தற்போது முதல் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. 

தலைப்புச்செய்திகள்