Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக : உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு இறுதித் தேதி நீட்டிப்பு

நவம்பர் 19, 2019 10:50

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கட்சியினரிடம் விருப்ப மனு பெறப்பட்டு வரும் நிலையில் விண்ணப்ப விநியோகம் குறித்து திமுக தலைமை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க உள்ளன. உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் மாத இறுதியில் நடத்தலாம் என தமிழக தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கட்சியினருக்கான விருப்ப மனு விநியோகத்தை கடந்த 14-ம் தேதி திமுக தொடங்கியது. வரும் 20-ம் தேதி (நாளை) வரை கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

விருப்ப மனுவை ரூ.10 கட்டி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பெறலாம் எனவும், அப்படி பெற முடியாதவர்கள் முரசொலி பத்திரிகையில் வந்துள்ள மாதிரிப் படிவத்தை வைத்து அதேபோன்று விண்ணப்பத்தை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஏராளமான தொண்டர்கள் விருப்ப மனுவைப் போட்டிபோட்டு வாங்கி வருகின்றனர்.

திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “நவ.14-ம் தேதி ஆரம்பித்து 20-ம் தேதிவரை விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கால அவகாசத்தை நீட்டித்திட பலவேறு மாவட்டச் செயலாளர்கள் வேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில் வரும் 27-ம் தேதி வரை விண்ணப்ப விநியோக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்ப மனு படிவத்தை ரூ.10 செலுத்தி மாவட்டத் தலைமை அலுவலகத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்