Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மகாராஷ்டிரா: மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா சார்பில் மேயராக கிஷோரி பெட்னேகரும், துணை மேயராக சுகாஸ் வாட்கரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மும்பை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மேயர் தேர்தலில் வெற்றி பெற தேவையான பலம் இல்லாததால், போட்டியிடப்போவதில்லை எனக் கூறி பாஜக ஒதுங்கிக் கொண்டது. அதுபோலவே சிவசேனாவுடன் சேர்ந்து மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் மேயர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தன.
வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், நேரம் முடிவடைவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாக திடீரென சிவசேனாவை சேர்ந்த கிஷோரி பெட்னேகரும், சுகாஸ் வாட்கரும் மனுத்தாக்கல் செய்தனர். வேறு யாரும் போட்டியிடாததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியானது.
இந்தநிலையில் மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா சார்பில் மேயராக கிஷோரி பெட்னேகரும், துணை மேயராக சுகாஸ் வாட்கரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மும்பை பரேல் பகுதியின் கவுன்சிலரான கிஷோரி கட்சியின் இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரேயின் தீவிர ஆதரவாளர் ஆவார்.